தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தங்கசாமி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கே.சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பத்தாண்டுகள் பேராசிரியர் அனுபவம் அல்லது நிர்வாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும், தேர்வுக்குழு மூலம் பரிந்துரைக்கப்படும் நபர்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றாமல் தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்கசாமிக்கு உதவி பேராசிரியர் அனுபவம் மட்டுமே இருப்பதாகவும், ஆசிரியர் கல்லூரிகளில் இணைப்பேராசிரியர் என்ற ஒரு பணியிடம் இல்லாத நிலையில், அதிலும் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதாக தங்கசாமியின் சுயவிவரக்குறிப்பு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு முரணாக தங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை துணைவேந்தராக செயல்பட தங்கசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.