சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (திங்கள் கிழமை) பெய்திருக்கும் மழையைவிட, இந்த வாரம் முழுதும் அதிகமான மழைபெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை வானிலை மையத்தைவிட, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை குறித்து கூறுவதே மக்கள் அதிகம் நம்புகின்றனர். பெரும்பான்மையான நேரத்தில் அவர் கூறுவது உண்மையாகிவிடுகிறது. நவம்பர் முழுதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும், வழக்கமான வடகிழக்கு பருவமழையை விட அதிகமாக இந்தாண்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள் கிழமை காலையில் சென்னையில் மழை பெய்யும் என முன்பே அவர் கணித்திருந்தார்.
இந்நிலையில், திங்கள் கிழமை (மதியம் 1 மணியளவில்) அவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது, ”டெல்டா மாவட்டங்களில் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தில் 200 மி.மீ மழை (காலை 8.30 மணிவரை 90 மி.மீ., அதன்பின் காலை 8.30-மதியம் 12.00 மணிவரை 115 மி.மீ) பதிவாகியுள்ளது.
காரைக்கால், திருவாரூர் மற்றும் சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் மழை பெய்யும்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
இன்றைய மழை வெறும் ஆரம்பம்தான். இந்த வாரம் தமிழகத்தில் பல திருப்பங்கள் காத்திருக்கின்றன. நிறைய வதந்திகள் பரவும். 2-3 நாட்களுக்கு அதனையெல்லாம் பார்க்காமல் இருத்தல் நல்லது.", என குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கள் கிழமை) இரவு மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.