மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (24.1.19) கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக எச்சரித்துள்ளதால் நாளை எந்த சேனலும் தமிழகம் முழுவதும் தெரியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேபிள் டிவியில் அலகு முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது எட்டாவது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது.
அதன்படி, மக்கள் விரும்பும் அலைவரிசைகளுக்கு (சேனல்) மட்டும் கட்டணம் விகிதத்தை தனித்தனியாக அல்காடெல் முறையிலும், சேனல்களை இணைத்து அதிகபட்ச சில்லறை விலை முறையில் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டு அறைகளான அரசு கேபிள் டிவி கார்பரேஷன், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் (tccl), வி.கே. டிஜிட்டல், சுமங்கலி இதன் விதிமுறைகள் தெளிவுகளை பொதுமக்களுக்கு வழங்காத நிலையில், விஷன் கேபிள் காஸ்ட், ஏ.எம்.எம். மற்றும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டண சேனல்களை அதிகபட்சமாக ரூ. 200 க்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது.
இந்த புதிய கொள்கையை அறிவித்த நிலையில் மக்கள் ரூபாய் 600 க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. அதிகபட்சமாக ரூ. 900 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆணையை ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், நிறுவனங்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும், ஜிஎஸ்டியை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி முதல் தமிழகத்தில் சுமார் 29 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களின் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு கோடி கேபிள் இணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.