இன்று வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை, விழுப்புரத்தில் மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மே 5-ஆம் தேதி வணிகர் தின விழாவும், மாநாடும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள வணிகர் உரிமை பிரகடன மாநாட்டிற்கு அதன் தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்க உள்ளார். இந்த மாநாட்டில் வணிகர் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார்.
சென்னை, விழுப்புரத்தில் நடக்கும் இந்த வணிகர் தின மாநாடுகளில், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் பங்கேற்க உள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகர் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.