விழுப்புரம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள வேலியம்பாக்கம் பழைய பாலத்தில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இருநாட்களுக்கு முன், பாலத்தின் நிலை மோசமாக இருப்பதாக கூறி, பழுதடைந்த பகுதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும் வாகன ஓட்டிகள் செல்லும் போது லேசான அதிர்வு ஏற்படுவதாகவும் கூறினர். இதையடுத்து அலுவலர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர். கான்கிரீட் ஸ்லாப்களைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடையே வைக்கப்படும் ஸ்ப்ரிங், பியரிங் நழுவியிருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 40 ஆண்டுகள் பழமையான பாலங்களில் இது இயல்பானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சீரமைக்கும் பணிகள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்பதால், நான்கு வழிச்சாலை அகல பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
நேற்று (ஜூலை 29) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன், காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்கள் பாலத்தை முழுமையாக பார்வையிட்டு, வேறு இடங்களில் பழுது இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.
தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil