போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த வழக்கு விசாரணை, நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.
ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு தெரிவித்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்சனையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்சனையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம்.
ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, 2.44 காரணி ஊதியத்தை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், 2.57 காரணி ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தால் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த வழக்கு விசாரணை, நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி பிரச்னைக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா? இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நாளை பதில் தருகிறோம் என தொழிற்சங்கங்கள் கூறியதையடுத்து, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'இரவு யோசித்து நாளை நல்ல பதில் தருவீர்கள் என நம்புகிறோம்' என தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.