அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து டிசம்பர் 17 ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தபட்டோருக்காக சமூக இட ஒதுக்கீடும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல், மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி திருநங்கை சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 20 சதவீத மூன்றாம் பாலினத்தவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்துள்ளதாகவும், 40 சதவீதத்தினர் பட்ட படிப்பு முடித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி, டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.