Trichy BJP Vijaya Raghu Murder: திருச்சியில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரி பாஜக.வினர் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாரதிய ஜனதாக் கட்சியின் மண்டல் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்தார்.
இன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதே பகுதியை சேர்ந்த மிட்டாய் பாபு என்பவர் இந்தக் கொலையை செய்ததாக தெரிய வந்திருக்கிறது. அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கொலை பதற்றத்தையும் பரபரப்பையும் அதிகரித்திருக்கிறது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி பாஜக.வினர் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர்.
இன்று இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதி கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.