க. சண்முகவடிவேல்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது. இதனால் ஆர்த்தி அத்தினா சூர்யாவிடம் கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் 6 மாத வாடகையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அத்தினா சூர்யா சிவாவின் மனைவி என்ற நிலையில், தனது கணவர் சூர்யா பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் பொறுப்பு வகிப்பதை காரணம் காட்டியும், சூர்யாவின் மூலமாகவும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறி வருவதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அத்தினா சூர்யா சிவா தம்பதியினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஆர்த்தி கூறியுளளார்..
அதோடு மட்டுமல்லாமல் சூர்யா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமக்கு சொந்தமான இடத்தையும், சொத்தையும் அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தன்னுடைய பெயருக்கு ஐந்து வருட கால அவகாசத்தில் எழுதித்தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அத்தினா சூர்யாசிவா மீது புகார் மனுவை அளித்துள்ளார்.
ஏற்கனவே சூரிய சிவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது தற்போது மீண்டும் ஓரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“