Advertisment

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ‘மறு உத்தரவு வரை நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது’

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. மூத்த வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennnai high court

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. மூத்த வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது.

Advertisment

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு திமுக நெருக்கடி கொடுத்தது. எடப்பாடி அரசு கவிழுமா? என்கிற எதிர்பார்ப்பும் உருவானது.

ஆனால் கவர்னரிடம் மனு கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? எனக் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களின் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மறுபடியும் எடப்பாடி பக்கம் தாவிவிட்டதால், எஞ்சிய 18 எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 18-ம் தேதி சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டது. இந்த வழக்கில் டிடிவி.தினகரன் அணி, சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று தரப்பிலும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வாதிட அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 23-வது ஹாலில் நண்பகல் 12 மணியளவில் நீதிபதி துரைராமி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. டிடிவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.ஆர்.ராமன், சல்மான் குர்ஷித் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல்  விஜய் நாராயணன், அரிமா சுந்தரம் வாதிட்டனர்.  வாத பிரதிவாதங்கள் பறிமாறப்பட்டன.

பகல் 1.30 : டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு எந்தத் தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. எனவே இப்போதைய சூழலில் சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடவில்லை. அதேசமயம், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை விதித்திருப்பது, மேற்படி 18 தொகுதிகளையும் காலியாக அறிவித்து எடுத்த  நடவடிக்கையை தடுத்து நிறுத்தியிருக்கிறது.  இரு தரப்புக்குமே பாதி வெற்றியும் பாதி தோல்வியும் இந்த சட்டப் போராட்டத்தில் இப்போதைக்கு கிடைத்திருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

பகல் 1.15 : இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி, ‘மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது’ என உத்தரவிட்டார். ஏற்கனவே இன்று வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை மேற்படி 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் தடை விதித்தது.

பகல் 1 மணி : டிடிவி தரப்பில் பி.ஆர்.ராமன் வாதிடுகையில், ‘எங்களது தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. அதனாலேயே அவர்கள் கர்நாடகாவில் தங்கியிருக்கிறார்கள். பதவி நீக்க உத்தரவு கூட அவர்களுக்கு வழங்கப்பட வில்லை’ என குறிப்பிட்டார். இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், விரிவான ஆவணங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும். அதுவரை வேறு நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

12.50 மணி : டிடிவி தரப்பில் துஷ்யந்த் தவே வாதிட்டதை தொடர்ந்து சபாநாயகர் தனபால் தரப்பில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். அவர் தனது வாதத்தின்போது, இந்த வழக்கில் விரிவாக மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். டெல்லி உத்தரவுப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதாக துஷ்யந்த் தவே குறிப்பிட்டதை மறுத்து வாதிட்டார் அரிமா சுந்தரம்.

12.40 : டிடிவி தரப்பில் துஷ்யந்த் தவே தொடர்ந்து வாதிடுகையில், ‘தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலால் டெல்லியில் சிலர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கடந்த 4 மாதங்களாக நடந்த ஊழல் நடவடிக்கைகளால் முதல்வர் மீது இவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதையே இவர்கள் வெளிப்படுத்தினார்கள்’ என அழுத்தம் கொடுத்தார் துஷ்யந்த் தவே.

12.20 மணி : உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில்சிபல், இந்த வழக்கு விசாரணையின்போது ஹாலில் உட்கார்ந்திருந்தார். அவருக்கும் இந்த வழக்கிற்கும் நேரடி தொடர்பு இல்லை. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இதே அமர்வில் இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. அதில் ஸ்டாலின் சார்பில் கபில் சிபல் ஆஜராகிறார்.

பகல் 12.15 : டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில், ‘சபாநாயகர் தனபாலின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. 18 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசில் மலிந்திருக்கும் ஊழலுக்கு எதிராகவே குரல் கொடுத்தனர். குறிப்பாக முதல்வர் மீது ஊழல் புகார்கள் எழுந்ததால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கடந்த பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர்கள் அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். எனவே இவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல.

தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு ஜெயிப்பதற்காகவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வேறு கட்சிக்கு செல்லவில்லை. எனவே கட்சித் தாவல் தடை சட்டம் இவர்களுக்கு பொருந்தாது’ என தனது வாதத்தில் துஷ்யந்த் தவே குறிப்பிட்டார். ‘இந்த அரசு டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது’ என்றும் தனது வாதத்தில் குறிப்பிட்டார் துஷ்யந்த் தவே.

 

 

 

Chennai High Court Ttv Dhinakaran Tn Assembly Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment