Advertisment

டிடிவி அணி 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆவணங்களை வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
sedapatti muthiah, TN assembly,dmk mla's meeting, TN assembly floor test, ttv.dhinakaran faction, ttv.dhinakaran faction 18 mla's disqualified, speaker dhanapal action

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆவணங்களை வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறினார்.

Advertisment

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை இன்று (செப்.18) சபாநாயகர் தனபால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் அது ஜெயித்து விடும். ஆனால் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்தே நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடக்குமா? என்பது முடிவாகும்.

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லுமா? என்பதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து திமுக.வை சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான சேடப்பட்டி முத்தையா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது...

‘அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. 10-வது அட்டவணையில் 2-வது பிரிவு, ஒரு எம்.எல்.ஏ. தனது கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினால் ஏற்படும் பிரச்னை பற்றி மட்டுமே கூறுகிறது. பிரிவு 6-ல் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கிறபோது எதிர்த்து வாக்களித்தால் வருகிற பிரச்னை தொடர்பானது. இந்த இரு பிரச்னைகளும் டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இல்லை.

1986-ம் ஆண்டு சட்டமன்ற விதி என்ன சொல்கிறது என்றால், கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை கோரி கொறடா கடிதம் கொடுக்கும்போது சாட்சி ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும். அதைத்தான், ‘அனெக்‌ஷர்’ என்கிறார்கள். சட்டமன்ற விதி பிரிவு 7 (2)-ன் படி சாட்சி ஆதாரம் இல்லையென்றால், கொறடாவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும்.

சட்டமன்ற விதி 7(3)-ன் படி கொறடா கொடுத்த கடிதத்தையும், அனெக்‌ஷராக அவர் கொடுத்த சாட்சி ஆதாரத்தையும் மேற்படி 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் வழங்கியிருக்க வேண்டும். அதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சபாநாயகரை சந்தித்து கேட்டிருக்கிறார்கள். அதாவது, கொறடா கடிதம் மட்டுமே தங்களுக்கு தரப்பட்டிருப்பதாகவும், சாட்சி ஆதாரம் (அனெக்‌ஷர்) கிடைக்கவில்லை என்றும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சாட்சி ஆதாரம் கொடுக்கப்பட வில்லை.

தவிர, அனெக்‌ஷர் அடிப்படையில் பதில் அளிக்க கூடுதல் அவகாசமும் கேட்டிருக்கிறார்கள். அதுவும் வழங்கப்படவில்லை. எனவே உரிய விதிமுறைப்படி இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூற முடியாது.

நான் சட்டமன்ற சபாநாயகராக இருந்தபோது, இரு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்டபடி முதலில் ஒரு மாதம், அதன்பிறகு ஒரு வாரம், அதைத் தொடர்ந்தும் நேரில் பதிலளிக்க வாய்ப்பு என இத்தனை வாய்ப்புகளை கொடுத்தேன். அதன்பிறகும் அவர்கள் இருவரும் கட்சி மாறியதை மறுக்கவில்லை. அதனால்தான் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்ததை உச்சநீதிமன்றமே ஏற்றது.

ஆனால் இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் அப்படி உரிய அவகாசம் கொடுத்து நடக்கவில்லை. எனவே இது நீதிமன்றத்தில் நிற்காது. 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் சட்டமன்றத்தின் உள்ளே வருவார்கள். உள்கட்சிப் பிரச்னையில் சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக நடந்திருக்கிறார். நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெறுவார்கள்’. இவ்வாறு சேடப்பட்டி முத்தையா கூறினார்.

 

Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment