Advertisment

டிடிவி தினகரன் தான் 420: டெல்லியில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்

டிடிவி தினகரன் 420 என கூறியது அவருக்கு தான் பொருந்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi palanisamy, TTV Dhinakaran, AIADMK

டிடிவி தினகரன் 420 என கூறியது அவருக்கு தான் பொருந்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் விமர்சித்துள்ளார்.

Advertisment

நாட்டின் 13-வது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு இன்று பதவியேற்றுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

டெல்லியில் அதிமுக அம்மா மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, சுதந்திர தினத்துக்குள் இரு அணிகளும் இணைந்து விடும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்களும் அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என கூறி வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது. தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செல்லாத ஒன்று. தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அதிமுக-வினர் நிராகரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி அணியினரின் இந்த அதிரடி முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிமுக கட்சிப் பெயரை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை விட்டுள்ளனர் இது சட்ட விரோதமானது.

என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமித்ததை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இப்போது என்னை நீக்குவதாக சொல்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் ஒன்று வெளியே ஒன்று என முரண்பாடாக பேசி வருகின்றனர். இது போன்று பேசி ஏமாற்று வேலைகளை செய்யும் 420-களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கடுமையாக சாடினார்.

இந்நிலையில், வெங்கையா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க பிரதமரை சந்தித்து மீண்டும் வலியுறுத்தினோம் என்றார். அப்போது, அவரிடம் தினகரன் 420 என குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 420 என கூறியது அவருக்கு தான் பொருந்தும். கடந்த மூன்று மாத நிகழ்வுகளை பார்க்கும் போது இது நன்றாக புரியும் என்றார்.

மேலும், அணிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், எங்கள் தரப்பிலும், அவர்கள் தரப்பிலும் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. விரைவில் அணிகள் இணையும் என நம்புவதாக தெரிவித்தார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், ஏற்கனவே பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று அரசு வெற்றி பெறும் என்றும் முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk Delhi Neet Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment