Advertisment

ஆளுநருடன் டிடிவி தினகரன் இன்று சந்திப்பு

டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்கவுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMk, OPS, EPS

டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்திக்கவுள்ளார்.

Advertisment

தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த மாதம் 21-ம் தேதி இணைந்தன.

அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற 12-ம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏ-க்கள் சுமார் 30 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேசமயம், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து, சட்டப்பேரவையை கூட்டி முதல்வர் பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, டிடிவி தினகரனுக்கு மேலும் சில எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 21-ஆக உயர்ந்துள்ளது. எம்பி-க்கள் சிலரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், இரண்டாவது தடவையாக நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி அணியினர் கூட்டிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் 109 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அடுத்தடுத்து தினகரனுக்கு ஆதரவு பெருகி வருவதாலும், தாங்கள் கூட்டும் கூட்டத்திற்கு எம்எல்ஏ-க்கள் சிலர் வராததாலும் தமிழக அரசு மெஜாரிட்டியை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், முதல்வர் பழனிசாமி உள்பட அவரது ஆதரவாளர்களை டிடிவி தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார். ஆனால், அவரது அறிவிப்புகள் செல்லாது என முதல்வரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும், கட்சித் தொண்டர்களிடையே தலைமை யார் என்பது குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க டிடிவி தினகரன் அனுமதி கோரியிருந்தார். அதனையேற்று அவருக்கு செப்டம்பர் 7-ம் தேதி (இன்று) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, டிடிவி தினகரன் இன்று பகல் 12.30 மணியளவில் சந்திக்கவுள்ளார். இதையொட்டி, காலை முதலே தினகரன் இல்லத்துக்கு எம்எல்ஏ-க்களும், எம்பி-க்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். மொத்தம் 10 பேருக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ஆனால், டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ-க்கள் 3 பேர், எம்பி-க்கள் 7 பேர் என மொத்தம் 10 பேர் செல்லவுள்ளனர். மற்றவர்கள் வெளியே நிற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் டிடிவி வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

ஆளுநர் சரியான முடிவு எடுக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநருடனான தினகரனின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Ops Eps Dmk Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment