Advertisment

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெயலலிதா உயிரிழப்பை தொடர்ந்து காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதில், சசிகலா அணியின் தரப்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். பன்னீர்செல்வம் அணியின் தரப்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். இருவரும் அதிமுக சின்னம் மற்றும் கட்சிக்கு உரிமை கோரியதால், அதிமுக சின்னம் மற்றும் கட்சியை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், அதிமுக அம்மா என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் ஓபிஎஸ் அணியும் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

தொடர்ந்து, அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய இரு தரப்பும், லட்சக்கணக்கில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் சிறை சென்றார். அதுவரை அவரது கட்டுப்பாட்டில் இருந்த அணி, அவர் சிறை சென்றதும் முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அதன் பின்னர், பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர். டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், அதிமுக பொதுக் குழுவை கூட்டி, சசிகலாவை அதிமுக நியமனப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இதன் பிறகு, அதிமுக கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஒருபுறமும், டிடிவி தினகரன் தரப்பு ஒருபுறமும் உரிமை கோரி வருகின்றனர்.

இதனிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வருகிற அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 6-ம் தேதியன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு முன்பாக இரு தரப்பும் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ம் தேதியை கடைசி நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. அதன்படி, இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், டிடிவி தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

இரட்டை இலை யாருக்கு என்பது குறித்தான விசாரணை நாள் நெருங்கும் இந்த நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று அரியலூர் புறப்பட்டு சென்றனர். வழியில் விக்கிரவாண்டியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என நம்புகிறோம். இரட்டை இலை விவகாரத்தில் இறுதி வெற்றி எங்களுக்கே. தேர்தல் ஆணையத்தில் நாங்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் முறையீடு செய்வார்கள். இது முடியும் காரியம் இல்லை. எந்த எதிர்ப்புகள் வந்தாலும் அதனை சந்தித்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

Election Commission Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment