சமீபத்தில், பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தச் சூழ்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
சசிகலாவை சந்தித்தப் பின் பேட்டியளித்த தம்பிதுரை, "குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவடையும்" என்றார்.
மேலும் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், பாலசுப்ரமணியம், கென்னடி ஆகிய ஐந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.