டிடிவி தினகரனை வரும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைத்தால் முடக்கப்பட்ட ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி டிடிவி தினகரனை, தில்லி போலீஸார் கடந்த மாதம் 25–ம் தேதி கைது செய்தனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தில்லி போலீஸாரால் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் வகையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் தில்லி போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதற்காக தில்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த மாதம் 26-ம் தேதி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
அவர்களை சென்னை கொண்டுவந்த போலீஸார், டிடிவி தினகரனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். முதலில், சுகேஷ் யாரென்று தனக்கு தெரியாது என்று கூறிவந்த தினகரன், பின்னர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை சென்னையில் இருந்து மீண்டும் தில்லிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கடந்த 28-ந்தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய போது நரேஷ் கைது செய்யப்பட்டார். நேற்று அவரது வீடு அலுவலகத்தில் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டபோது, ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் கொடுத்த பணம் என்று நரேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, டிடிவி தினகரன் முன்னிலையில் ஹவாலா தரகர் நரேசை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பணம், தான் கொடுத்து தான் என்பதை டிடிவி தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குளில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது. இதன் மூலமாக தில்லி போலீஸார் ஆதாரங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதேபோல, ஹவாலா தரகர் நரேசின் 2 நாள் காவலும் இன்று முடிவடைகிறது. இதையடுத்து டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் தில்லி திஸ்ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, டிடிவி தினகரனை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காணொலி காட்சி(வீடியோ) மூலம் தினகரனை விசாரிக்க தில்லி போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மல்லிகாஜுனாவையும் வரும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தில்லி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.