எதிர் டீம் சிக்ஸர் அடிக்கவா பந்து போடுவார்கள் என டி.டி.வி., தினகரன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விவகாரத்தில் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (அக்.27) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “பத்திரிகையாளர்களை பார்த்து என்ன குரங்கு மாதிரி தாவி தாவி வர்றீங்க. சாராய வியாபாரிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று கோபத்தில் பேசியப்படி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
ஏற்கனவே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலத்த டி.டி.வி., தினகரன், “எதிர் டீம் சிக்ஸர் அடிக்கவா பந்து போடுவார்கள். அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. இப்போதானே வந்திருக்கிறார். போகப் போக சரியாகிவிடுவார்” என்றார்.
மேலும், ”அவர் ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவர் ஆக உள்ளார். அவரின் பேச்சை கட்சித் தலைமையும் கவனிக்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil