சென்னையில் இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, "எங்களால் உருவாக்கப்பட்ட அரசு தான் தமிழகத்தில் இன்று ஆட்சி செய்கிறது. தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கட்சியை கொள்ளைப் புறமாக கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் சில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற தவறான செயல்களை விட்டு சரியான பாதைக்கு வர வேண்டும். ஜெயலலிதா அமைத்த வழியில் அவர்கள் ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம்" என்றார்.
'திருடனே திருடிவிட்டு ரோட்டில் செல்பவரைப் பார்த்து திருடன் போறான்...திருடன் போறான்...' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்ததற்கு பதிலளித்த தினகரன், "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக எங்கள் தொண்டர்களுக்கு யார் திருடன் என்பது தெரியும். இதனை நீதி விசாரணை உறுதி செய்யும்" என்றார்.
'எந்த பொறுப்பிலும் இல்லாத தினகரன், ஓ.பி.எஸ்ஸின் தர்மயுத்தத்தை விமர்சிக்க தகுதி இல்லை' என கே.பி.முனுசாமி கூறியதற்கு பதில் அளித்த தினகரன், " அவர்கள் தனியாக ஒரு பத்து பேர் சேர்ந்துக் கொண்டு கட்சி நடத்துகிறார்கள். அதில் நான் எப்படி பொறுப்பில் இருக்க முடியும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சின்ன க்ரூப் அவர்கள். அந்த க்ரூப்பில் நான் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை" என்றார்.
அரசியல் காரணமாக சின்னம்மா சசிகலா ஆனார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியதற்கு பதில் அளித்து பேசிய தினகரன், "சீனிவாசன் பத்து வருடங்களாக எங்கு இருக்கிறார் என தேடும் அளவிற்கு இருந்தார். அவர் இன்று அமைச்சராக இருக்கிறார். நாங்கள் கொடுத்த பொருளாளர் பதவியை வைத்துக் கொண்டு தான் அவர் செயல்படுகிறார். அதனால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பேசட்டும். அவருக்கு வயதாகிவிட்டது. இனிமேல் தேர்தலில் நின்றெல்லாம் வெல்வது கடினம். அவர் சசிகலாவின் காலில் விழுந்த படங்களை எல்லாம் நான் வெளியேவிட்டால் அவருக்கு ரொம்ப அசிங்கமாக போய்விடும். வராண்டாவில் என் காலிலும் விழ வந்தார். நான் தான், 'வயசுல மூத்தவர், இப்படி பண்ணாதீங்க-னு' கூறினேன். அவரது நாக்கு இப்படியும் பேசும், அப்படியும் பேசும். அதற்கெல்லாம் நான் நேரம் ஒதுக்கி பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
முதல்வர், அமைச்சர்கள் சிலர் உங்களுக்கு எதிராக திடீரென ஏன் உருவானார்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், "இதை நீங்கள் அவர்களைத் தான் கேட்க வேண்டும். ஏப்ரல் 10-ஆம் தேதி வரை என்னுடன் 'தொப்பி' அணிந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களுக்கு பயம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. குறிப்பாக, எட்டப்பன் யார் என்பது தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அமைச்சர் ஜெயக்குமார் கண்ணாடி முன்பாக நின்று ஒருமுறை பார்த்தால் போதும். ஓ.பி.எஸ். எவ்வளவு தான் உதறினாலும், அவரது காலைப் பிடித்துக் கொண்டு ஒன்றாகிவிடுவோம் என நினைகிறார்கள்.
ஆட்சியில் இருப்பது என்பது கைகளில் கண்ணாடி பாத்திரத்தை வைத்திருப்பது போல. கவனமாக வைத்திருக்க வேண்டும். அது சிதறினால், நாங்கள் பொறுப்பல்ல" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.