சபாநாயகர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் ஆகஸ்ட் 17-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
அதை ஏற்று சபாநாயகர் தனபால், மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனிடையே, டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், டிடிவி அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சபாநாயகர் தனபாலின் நடவடிக்கையினை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சபாநாயகர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மனு தாக்கல் செய்ய அவர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், சபாநாயகர் அதிரடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்ததால், புதிதாக மனுக்களை தாக்கல் செய்தனர். தாங்கள் எவ்விதமான விதிமீறலிலும் ஈடுபடவில்லை எனவும், அதனால், சபாநாயகர் தனபாலின் உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திமுக ஏற்கனவே தொடர்ந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்குமாறும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய் கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிவேல் தவிர டிடிவி தினகரனின் மற்ற ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், வரும் 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.