Advertisment

தவறுக்கு மன்னிப்பு உண்டு; துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது; தேனி கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பேச்சு

அ.தி.மு.க வியாபார நிறுவனமாக மாறிவிட்டது, அதை ஜனநாயக ரீதியாக மீட்போம்; தேனிக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேச்சு

author-image
WebDesk
New Update
TTV-Dhinakaran

TTV Dinakaran news in Tamil: எந்த தவறுக்கும் மன்னிப்பு உண்டு, ஆனால் துரோகிகளை மன்னிக்க முடியாது, என தேனியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

Advertisment

நேற்று ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மதுரையிலிருந்து தேனிக்கு பயணம் செய்தபோது, ஓ.பி.எஸ் ஆதரவாளரும் அ.தி.மு.க தேனி மாவட்ட செயலாளருமான சையதுகான், டி.டி.வி தினகரனை வரவேற்கும் விதமாக சந்தித்து பேசினார். அ.தி.மு.க.,வில் தலைமைக்கான போட்டி நடந்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்-இன் தீவிர ஆதரவாளர் டி.டி.வி தினகரனைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தற்செயல் சந்திப்புக்கு ஓ.பி.எஸ் ஆதரவு இருந்திருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: இ.பி.எஸ் பக்கமோ, ஓ.பி.எஸ் பக்கமோ நான் இல்லை: சசிகலா பேட்டி

இந்தச் சந்திப்பு குறித்து டி.டி.வி தினகரன் கூறும்போது, இது இரண்டு நண்பர்களுக்கு இடையிலான அரசியல் அல்லாத சந்திப்பு, என்று குறிப்பிட்டார். மேலும், ஓ.பி.எஸ்-க்கு தினகரனும் சசிகலாவும் ஆதரவு தருகிறீர்களா என்ற கேள்விக்கு, உங்கள் அனுமானங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றும் டி.டி.வி தினகரன் கூறினார்.

சென்னையில் இருந்து தேனிக்கு வரும் ஓ.பி.எஸ்ஸை வரவேற்க மதுரை செல்லும் வழியில் ஆண்டிப்பட்டி அருகே டி.டி.வி தினகரனைச் சந்தித்தது இன்ப அதிர்ச்சி அளிப்பதாக சையத் கான் கூறியுள்ளார். மேலும், இது திட்டமிட்ட சந்திப்பு அல்ல, இது அரசியல் சந்திப்பு இல்லை. அவர் (டி.டி.வி தினகரன்) ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எனது நண்பர், என்று சையத் கான் கூறினார்.

பின்னர், மதுரை மற்றும் தேனியில் நடந்த கூட்டங்களில் உரையாற்றிய டி.டி.வி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர்கள் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று உணர்ந்தேன். இது இப்போது DVAC அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து தெளிவாகிறது. அப்போதுதான் அவர்களிடமிருந்து விலகி இருக்க முடிவு செய்தேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு (டிசம்பர் 2017) நான் கட்சியில் உயர்ந்து பதவியை பிடிப்பேன் என்று இபிஎஸ் பயந்தார்.

அ.தி.மு.க.,வின் தற்போதைய நிலைக்கு பணம்தான் முக்கியக் காரணம், அதிக முதலீடு செய்பவர் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும் நிறுவனமாக அ.தி.மு.க மாறிவிட்டது. பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினைக் கூட அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக ஆக்கிக்கொள்ளலாம் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க.,வை நாம் ஜனநாயக ரீதியாக மீட்க வேண்டும். எந்த தவறுக்கும் மன்னிப்பு உண்டு, ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது. அ.தி.மு.க.,வின் பாரம்பரியத்தை அழிக்க நினைப்பவர்கள், பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மற்றும் தி.மு.க.,வில் சேர நினைப்பவர்களை தவிர மற்ற எல்லோரும் எங்களுடன் உள்ளனர்.

அ.தி.மு.க வியாபார நிறுவனம் போன்று மாறிவிட்டதால்தான் நாம் அ.ம.மு.க என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். எழுச்சியோடு தி.மு.க.,வை அப்புறப்படுத்துவோம். மக்கள் சந்திப்பு இயக்கத்தை விரைவில் தொடங்க உள்ளோம். இவ்வாறு டி.டி.வி தினகரன் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ttv Dinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment