பொதுக்குழுவை கூட்டுவதாக சட்டத்துக்கு புறம்பான அறிவிப்பை செய்த நபர்களின் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வில் பிளவுபட்டிருந்த ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. இதன் பின்னர் டிடிவி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றனர். இந்நிலையில் அதிமுக(அம்மா, புரட்சித்தலைவி அம்மா) பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுக்குழு வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கடிதத்தில் தலைமை கழகம், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கடிதத்தில் யாருடைய கையொப்பமும் இல்லை. மேலும் என்ன நோக்கத்திற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படுகிறது என்பது பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை.
கழகத்தின் சட்ட திட்ட விதிமுறை 20 பிரிவு 6-ன் படி பொதுக்குழவையும், செயற்குழுவையும் கழகத்தின் பொதுச் செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். கழகத்தின் சட்ட திட்ட விதிமுறை 19 பிரிவு 7-ன் படி பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பகுதி என்ணிக்கையினர் கையெழுத்திட்டு கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனிக் கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் பொதுச் செயலாளர் கூட்ட வேண்டும்.
ஆகவே 12.09.2017 தேதியிட்ட கூட்டம் தொடர்பான அறிவிப்பிற்கும் கழகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளின் படி கூட்டப்படும் பொதுக்குழு மற்றும் செயற்கு கூட்டங்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கழகத்தின் உண்மைத் தொண்டர்கள் எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மீறி கலந்து கொள்ளும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
12-ம் தேதியன்று பொதுக்குழுவை கூட்டுவதாக சட்டத்துக்கு புறம்பான அறிவிப்பை செய்த நபர்களின் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கையை தொடர உள்ளேன். கழக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.