கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடந்த மாதம் 7ம் தேதி, பெரியார் சிலை உடைப்பை எதிர்த்து கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் விளைவாகத் தந்தை பெரியார் திராவிட கட்சி மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைக் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீதான வழக்குகளை விசாரித்தபோது, ஜீவானந்தம் மற்றும் பாலா என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். பின்னர் சிறையிலுள்ள இருவருக்கும் முறையாக இந்தத் தகவல் வழங்கப்பட்டது.
மேலும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. சென்ற ஆண்டு 2017-ல், குண்டர் சட்டத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 36 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.