சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் 3-வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல மின்தூக்கியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏறினர். தரைத் தளத்துக்கு அருகே வந்தபோது மின்தூக்கி பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அனைவரும் மின்தூக்கியில் சில நிமிடங்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர், அவசர வழியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை (Lifts) சரியாக பராமரிக்காத காரணத்தால் 2 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அரசு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 29.11.2022 அன்று கலந்து கொண்டார்.
அமைச்சருடன் அத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர். மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி. சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி. கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை, இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.