Advertisment

இரட்டை இலை வழக்கில் விசாரணை முடிந்தது : எந்த நேரத்திலும் இறுதி உத்தரவு வெளியாகலாம்

இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி விசாரணை முடிந்தது. எந்த நேரத்திலும் இறுதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என தெரிகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission of india, two leaves symbol, aiadmk, vk sasikala, ttv dhinakaran, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, two leaves symbol case adjourned for final order

இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி விசாரணை முடிந்தது. எந்த நேரத்திலும் இறுதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என தெரிகிறது.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்கிற விவகாரம், டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்னொரு தரப்பாகவும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா தரப்புக்காக அபிடவிட்களை வாங்கிக்குவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்து நிற்கிறார்கள்.

இரட்டை இலை யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் உத்தரவிட்டது. பிறகு உச்சநீதிமன்றம் இந்த அவகாசத்தை நவம்பர் 10 வரை நீட்டித்தது. ஆனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணி தரப்பினர் இந்த வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டு வந்ததால் விசாரணை தள்ளிச் சென்றது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான 5–ம் கட்ட விசாரணை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நவம்பர் 1-ம் தேதி பிறபகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இரு அணிகள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

வி,கே.சசிகலா தரப்பு வக்கீல் விஜய் ஹன்சாரியா வாதம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தொடர்ந்து அதே அணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். மொத்தமாக இந்த வாதங்கள் 3 மணிநேரத்துக்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26–ந் தேதி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புக்கள் வாசிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்தச் சூழலில் சசிகலா பொதுச்செயலாளராக நியக்கப்பட்டார் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தற்போது இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் நடத்திய பொதுக்குழுவும், இணைப்பும் சட்டரீதியானவை அல்ல என கூறப்பட்டது. அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லாது என வாதிடப்பட்டது.

இபிஎஸ்-ஓபிஎஸ் அணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், ‘சசிகலா தரப்பில் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அவர்களே அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சில சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை வாசிக்கும் போது தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டுமே வாசிக்கின்றனர். அதற்கு அடுத்த பத்தியிலேயே அவர்களுக்கு பாதகமாக இருக்கும் வி‌ஷயங்களை வேண்டுமென்றே வாசிக்காமல் தவிர்க்கின்றனர்’ என குற்றம் சாட்டினார்.

அன்று முகுல் ரோகத்கி வாதிட உரிய அவகாசம் இல்லாததால், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 6–ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஏ.கே.ஜோதி உத்தரவிட்டார். 6-ம் கட்ட விசாரணை நவம்பர் 6-ம் தேதி நடந்தது. அன்று விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன்படி 7-வது மற்றும் இறுதிகட்ட விசாரணை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று (8-ம் தேதி) நடைபெற்றது. இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதிடுகையில், ‘ஜெயலலிதா மரணத்தின்போது, கட்சியின் நிர்வாகிகள் யார் என்பதை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதற்கிணங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். இதன்படி, தினகரனை ஆதரித்தோர் 168 உறுப்பினர்களே! பெரும்பான்மை எங்களிடத்தில் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டார்.

எனவே உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசமாக நவம்பர் 10-க்குள் இதில் முடிவு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பு வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இனி எந்த நேரத்திலும் இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கலாம். ஒருங்கிணைந்த இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு இரட்டை இலை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

எனினும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புரட்டிப் பார்த்து உத்தரவு வழங்க வேண்டியிருப்பதால் தேர்தல் ஆணையம் சற்றே கூடுதலாக அவகாசம் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் வழங்கிய நவம்பர் 10-ம் தேதி அவகாசத்திற்குள் உத்தரவு வருமா? என்பது சந்தேகமே!

 

Ttv Dhinakaran Vk Sasikala Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment