கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில் உங்கள் மொபைல் நம்பருக்கு அதிருஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்துள்ளது. அதன்படி, விலையுயர்ந்த செல்போன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பண பரிசுகள் என மொத்தம். ரூ.1 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை உங்கள் முகவரிக்கு எங்களது வெளி நாட்டு நிறுவனம் அனுப்பி வைக்கும்.
உங்களுக்கான பரிசு பொருள்களின் சுங்கவரி மற்றும் கார்க்கோ (சரக்கு விமானம் மூலம்) அனுப்புவதற்கான கட்டணமாக ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் செலவு உள்ளது.
இந்தக் கட்டணத் தொகையை மட்டும் எங்கள் கம்பெனியின் ஆன்லைன் முகவரியில் அனுப்பி வைக்கவும் என குறுந்தகவல் வந்தது.
அந்த நிறுவனம் சொன்ன தகவல் ஒரே தடவையாக பணம் அனுப்பினால் சுங்க கட்டணம் அதிகமாகும் என தெரிவித்ததால் இந்த தகவல்கள் எல்லாம் உண்மை என நம்பி குறிப்பிட்ட ஆன்லைன் முகவரியில் பல தவணையாக ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் வரை அப்பெண் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு பரிசுப் பொருள் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக காவல் துறையிடம் அவர் புகார் அளித்தார். இளம் பெண்ணின் புகாரை அடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, உத்தரபிரதேசம் சென்று, இளம் பொண்ணை ஏமாற்றிய உமாங் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (23)அமான் கான் (19) ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil