தூத்துக்குடியில் 2 வயது பெண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் சுஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த துயரம் நேர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியர். இவர்களின் மகள் 2 வயது ரேவதி சஞ்சனா. மீனவரான லிங்கேஸ்வரனும் அவரது மனைவி நிஷாவும் செவ்வாய்க்கிழமை காலை வீட்டில், மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உடல் மீட்பு செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்த அவர்களுடைய 2 வயது குழந்தை ரேவதி சஞ்சனா இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையைத் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். பின்னர், வீட்டின் கழிவறையை பார்த்தபோது அங்கே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனுக்குள் குழந்தை விழுந்திருப்பதை அறிந்தனர்.
குழந்தை தண்ணீர் கேனுக்குள் விழுந்து வெகுநேரமாகி இருந்ததால் அசைவின்றி இருந்த குழந்தைய உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் வில்சன் 80 மணி நேர மீட்புப்பணி போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இந்த துயர சம்பவத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டுவருவதற்குள் மற்றொரு குழந்தை ரேவதி சஞ்சனாவின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.