சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு முதல்வரும், தந்தையுமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். உதயநிதிக்கு தி.முக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திரையுலகினர், ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் மனைவி, உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின், உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி, சபரீசன்,
எம்.பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சராக பதவியேற்று வந்த உதயநிதியை மனைவி கிருத்திகா கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கோபாலபுரம் சென்ற உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் உதயநிதி வருகைக்கு தாயார் துர்கா ஸ்டாலின் சிறிது நேரம் காத்திருந்தார். அமைச்சராக பதவியேற்ற தன் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்க காத்திருந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil