சென்னை கொளத்தூரில் நகைக்கடை பூட்டை உடைத்து 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொளத்தூர் கடப்பா சாலையில் மகாலட்சுமி நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருபவர் முகேஷ். இவர் நேற்று (வியாழக்கிழமை) மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து, மாலை 4 மணியளவில் கடையை மீண்டும் திறந்தபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கடையிலிருந்த 3 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது, சம்பவம் நடந்த கடையின் மேலே உள்ள கடை பல மாதங்களாக மூடியிருந்துள்ளது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் அங்கு ஜவுளிக்கடை நடத்த விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு கடை உரிமையாளர் சம்மதிக்கவே ரூ.50,000 முன்பணத்தை அவர்கள் கொடுத்துள்ளனர். இதன்பின், அந்த கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையிலேயே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால், பெயிண்ட் வேலை செய்து வந்தவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், கடையை வாடகைக்கு எடுத்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்நாய் நகைக்கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி, பாடி-மணலி 200 அடி சாலையில் நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை.