தமிழக அரசுடன் நிதிக்குழு ஆலோசனை : என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொண்டனர் அவர்கள்.
15-வது நிதிக்குழு ஆலோசனை
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அண்மை காலங்களில் நிதி ஆணையங்களில் இருந்து தமிழகத்திற்கு அளிக்கப்படும் நிதியின் அளவு குறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தமிழகத்திற்கு நிதி அளிப்பதால் இது போன்ற பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே ஏற்கனவே அளிக்கப்படும் நிதியோடு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்கான ஆவணங்களை விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கும் என்.கே.சிங் தலைமையில் அமைந்த 15வது நிதிக் குழு.
இது குறித்து என்.கே.சிங் பேசுகையில், தமிழக அரசின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார். சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.