டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த முகாமில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக அரசு இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயித்த நிலையில் கூடுதலாக 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தான் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருது நகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது குறுஞ்செய்தியை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுச் செல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல், தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil