வைகோ ஒரு ரியல் ஹீரோ என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மதிமுக மூத்த தலைவர் வைகோ தொடர்பான ஆவணப்படத்தின் திரையிடலில் முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ’மாமனிதர் வைகோ’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்வில் துரை வைகோ, கே.எஸ். அழகிரி, நல்லகண்ணு, திருமாவளவன், கி. வீரமாணி, கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ”நெருக்கடி காலத்தில் அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உட்சாகப்படுத்தினார். பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். மாணவர் அணியிலிருந்து வைகோவிடம் தேதி கேட்டு கூட்டங்கள் நடத்தினேன் நான். படத்தில் இருக்கும் கதாநயாகன் சித்தரிக்கப்பட்டவர் ஆனால் வைகோ உண்மையான ஹிரோ ” என்று அவர் கூறினார்.
கருணாநிதியிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று வைகோ கூறினார். இதுபோலவே முதல்வர் பேசியபோது, வைகோவிற்கு துணையாக நானும் இருப்பேன் என்று அவர் கூறினார். மேலும் வைகோவின் உடல் நலம் முக்கியம் என்பதால்தான் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் என்று தான் கூறியதாக முதல்வர் தெரிவித்தார்.