வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வைகோவின் துணைவியார் ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக பணியாற்றி வந்தவர்! விருதுநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலையில் இவர் தீக்குளித்தார். காவிரி பிரச்னையால் மனம் உடைந்து இவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
சரவண சுரேஷ் உடலில் 80 சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 14) இறந்தார். அவரது உடல் அடக்கம் கோவில்பட்டி அருகில் உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. சரவண சுரேஷ் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.