Advertisment

கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம்! அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

வந்தே மாதரம் பாடலை கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் பாடுவதை கட்டாயமாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019: Chennai High Court

Election 2019: Chennai High Court

அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியது. இத்தேர்வில் பங்கேற்ற வீரமணி என்பவர் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். தேர்வுக்குப் பின் வெளியிடப்பட்ட விடைத்தாளில், வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு சமஸ்கிருதம் என பதிலளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வங்கமொழி என பதிலெழுதிய மனுதாரர், தனக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளீதரன், வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என வழக்கறிஞர்களுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள், வந்தே மாதரம் பாடல் முதலில் பக்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதியதாகவும், பின் அது சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதை ஏற்று மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஒப்புக் கொண்ட அரசு தலைமை வழக்கறிஞர், இருந்தாலும் கட் ஆப் மதிப்பெண்களை மனுதாரர் பெறவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரருக்கு நான்கு வாரங்களில் பணிநியமனம் வழங்க உத்தரவிட்டார். அத்துடன், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் அடங்கிய அமர்வு, வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி, சமஸ்கிருதம் என இரு விடைகளும் சரியானவையே. இருந்தாலும், கட்- ஆப் மதிப்பெண்களை விட குறைவாக பெற்ற மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தது.

மேலும், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உத்தரவைப் பொறுத்தவரை, இதுசம்பந்தமாக அரசு தான் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்பதால் இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தை அரசிடமே விட்டு விடுவதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment