Advertisment

பழக்கடையில் அத்துமீறிய வீடியோ: வாணியம்பாடி ஆணையர் இடமாற்றம்

வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaniyambadi Municipality commissioner atrocities, vaniyambadi, municipality officials atrocities vaniyambadi fruit vendors, வாணியம்பாடி, வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பழங்களை கொட்டிய வீடியோ, வாணியம்பாடி வியாபாரிகள் பழங்களைக் கொட்டிய ஆணையர், வைரல் வீடியோ, தமிழ் செய்திகள், vaniyambadi commissioner atrocites vira video, viral video, latest tamil news, latest tamil nadu news

Vaniyambadi Municipality commissioner atrocities, vaniyambadi, municipality officials atrocities vaniyambadi fruit vendors, வாணியம்பாடி, வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பழங்களை கொட்டிய வீடியோ, வாணியம்பாடி வியாபாரிகள் பழங்களைக் கொட்டிய ஆணையர், வைரல் வீடியோ, தமிழ் செய்திகள், vaniyambadi commissioner atrocites vira video, viral video, latest tamil news, latest tamil nadu news

வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழக அரசு பொது முடக்க உத்தரவில் சில தளர்வுகளை அறிவித்ததன் பேரில், பல நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பின்னர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கடைகளை ஆய்வு சென்றார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், பழக்கடை ஒன்றில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படவில்லை என்று தட்டோடு பழங்களை தள்ளிவிட்டுள்ளார்.

இதையடுத்து, பெண் ஒருவர் சாலையோரம் தள்ளுவண்டியில் பழங்களை வியாபாரம் செய்துவந்தார். அங்கே சென்ற நகராட்சி ஆணையர் தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை என்று கூறி தள்ளுவண்டியில் இருந்த வாழைப்பழங்களை எடுத்து வீதியில் வீசினார். மற்றொரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்களை அப்படியே தூக்கி தள்ளி கவிழ்தார். அதே போல, சாலையோரம் பழ வியாபாரம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவரின் தள்ளுவண்டியை அப்படியே தலைகீழாக குப்புற கவிழ்த்தார்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் பழக் கடைகளில் இருந்த பழங்களை கொட்டிக் கவிழ்த்தது, தள்ளுவண்டியை குப்புற கவிழ்த்தது போன்ற செயல்களின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்த விடியோவைப் பார்த்த பலரும், வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த செயலைக் கண்டித்துள்ளனர். நகராட்சி ஆணையரின் அடாத செயலைப் பார்த்த பொதுமக்கள், நெட்டிசன்கள், “ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை. அதைவிடுத்து இப்படி செய்யலாமா? இவரது மனிதாபிமானத்தை கொரோனா கொன்றுவிட்டதா?

என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாணியம்பாடியில் பழக்கடைகளில் இருந்த பழங்களை கொட்டி கவிழ்த்த நகராட்சி ஆணையரின் செயலுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், பல முறை எடுத்துக் கூறியும் வியாபாரிகள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டால் ஏற்பட்ட சமூக தொற்றுபோல, வாணியம்பாடி மாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படி செய்ததாக கூறிய ஆணையர் சிசில் தாமஸ், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார் கமிஷனர் சிசில் தாமஸ். அங்கு, சம்பவம் குறித்து உயரதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் கொடுத்தார். ஆனாலும், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் கமிஷனர் பொறுப்பிலிருந்து சிசில் தாமஸ் விலக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Tamil Nadu Viral Social Media Viral Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment