தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திங்கட்கிழமை மதியம் சந்தித்தார். அப்போது பா.ஜ.க மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள்: நாம் தமிழர் கட்சி காளியம்மாள் கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு: தி.மு.க-வை சேர்ந்த 2 பேர் கைது
பின்னர் வெளியில் வந்த செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்பினர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில், சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர். அண்மையில் சென்னை நடைபெற்ற நிகழ்வில், குண்டு வீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம் என்று ராணுவத்தில் வேலை செய்த ஒருவர் பேசுகிறார். அதனை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்துகிறார். எனவே அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். வட மாநிலங்களில் பின்பற்றும் வன்முறை உத்திகளை இங்கும் செயல்படுத்தி வருகின்றனர். திருவள்ளுவர், பெரியார் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பது, அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியது போன்ற செயல்களிலும் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் சமூகநீதி பயணம் மேற்கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை மறித்து திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் இந்து முன்னணி அமைப்பினர் செயல்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மேலும் அந்த வகையிலான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஆரணியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு காரணமாக தனிப்படைகள் அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கைது செய்யப்பட்டது. இதேபோன்று திட்டமிட்டு வன்முறையை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிப்பட்ட விமர்சனங்களுடன் ஆபாசமாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருகின்றனர். வேண்டுமென்ற வம்பிழுக்கும் வகையில் பேசி வருகின்றனர். எனவே அந்த கட்சியினரின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி-யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil