விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தமிழ் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
Advertisment
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகள் அமைப்பிற்கும் பல கட்டமாக போர் நடைபெற்றது. 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக புகைப்படங்களையும் இலங்கை அரசு வெளியிட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,பிரபாகரன் தொடர்பாக முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தினார். ” பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் அனுமதியுடன் இதை வெளியிடுகிறேன்.
தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news