பாலியல் ஆடியோ வெளியான விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் குறித்து ஒரு ஆடியோ நேற்று வெளியானது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது தாயுடன் ஒரு சிபாரிசு வேண்டி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட தொடர்பால், ஆகஸ்ட் 9ம் தேதி கவிதாவுக்கு வட சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய மாநகராட்சி அலுவலகத்திற்கு கவிதா சென்றுள்ளார். அங்கு குழந்தையின் தந்தை பெயர் என்ன என்று அதிகாரிகள் கேட்க, அதில் அமைச்சரின் பெயரே ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது பதிவு செய்யப்பட்ட அந்த ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். மாஃபியா கும்பல் தான் ஆடியோ மார்ஃபிங் கச்சிதமாக செய்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆடியோ தொடர்பாக எந்தவித சோதனைக்கும் நான் தயார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த குரல் என் குரல் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், 'அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என நாங்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போது, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் திண்டுக்கல் ஹோட்டலில் சர்ச்சையில் சிக்கியுள்ள பெண்ணுடன் ஜெயக்குமார் தங்கியிருந்தார்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து வெற்றிவேல் கூறுகையில், "ஒரு சிபாரிசுக்காக சென்ற அந்த பெண்ணுக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்துள்ளார். இது அந்த பெண்ணின் தாயாருக்கு தெரிந்தவுடன், 'உங்கள் மகளை தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று அமைச்சர் வாக்கு கொடுத்திருகிறார். இதன்பிறகு, பல முறை அந்த பெண்ணுடன் அவர் ஒன்றாக இருந்துள்ளார்.
அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என நாங்கள் எல்லாம் அழுது கொண்டிருந்த போது, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் திண்டுக்கல் ஹோட்டலில் அந்த பெண்ணுடன் ஜெயக்குமார் தங்கியிருந்தார். ஹோட்டல் பெயர், அறை எண், ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. என்னிடம் வேறு சில ஆதாரங்களும் உள்ளன.
ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை என்று அமைச்சர் சொன்னாரே தவிர, குழந்தை என்னுடையது இல்லை என்று கூறினாரா? அவரால் அப்படி சொல்ல முடியாது. தேவைப்படும் போது, எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன்.
முதல்வர் பழனிசாமி இந்த விவகாரத்தில் ஒதுங்கிக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் தலையிட்டால், பின் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்புறம் புலம்பக் கூடாது. அந்தப் பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை. அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். இந்த ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
வெற்றிவேலின் இந்த பேச்சு இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தினகரன் பக்கம் இருக்கும் 18 பேரும், நதிகள் கடலில் இணைவது போல அதிமுகவில் இணைவார்கள். பாலியல் ஆடியோ வெளியான விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.