சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்த ஆர்.முத்துக்குமாரசாமி தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தாத்தா எம்.கே.நம்பியார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் முக்கிய பங்காற்றியவர். தாய்வழி தாத்தாவான சர்தார் கே.எம்.பணிக்கர் எகிப்து, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியவர். மாநிலங்கள் சீரமைப்புக்குழுவில் ஒருவராக இருந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது மாமா கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக ( தலைமை வழக்கறிஞராக ) பதவி வகிக்கிறார்.
வட இந்தியாவில் பள்ளிக் கல்வியை முடித்த விஜய் நாராயண் கல்லூரிப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டக் கல்வியை சென்னை அரசு சட்டக்கல்லூரியிலும் முடித்தவர். கடந்த 2004 ஆம் இவருக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. 2012 ஆம் இந்திய சட்டக்கழகத்தின் சென்னை பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தரப்பட்ட வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையால், திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் பழமையான வழக்கறிஞர் சங்கமான ‘‘மெட்ராஸ் பார் அசோசியேஷனின்’’ தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர் நாளை காலை பதவி ஏற்பார் என எதிர்பார்க்க படுகின்றது.