தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பச்சை சட்டை, வேட்டி அணிந்து சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கெத்தாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உச்ச நட்சத்திரங்களாக ஆக்கிரமித்திருந்தாலும், புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்துடன் பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் ராஜபாட்டையில் வலம் வந்தார்.
நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்தும் பெரும் வெற்றி பெற்ற விஜயகாந்த்தை அவருடைய ரசிகர்கள் கேப்டன் என்று அழைப்பதிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சினிமாவில் இருந்து அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த் தே.மு.தி.க-வைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக இடம்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்த தேர்தல்களில் தமிழ்நாடு முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்த்தின் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால், அரசியல் பொதுமேடைகளில் மிகவும் அரிதாகவே பங்கேற்று வருகிறார்.
விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், புத்தாண்டு அன்று தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விஜயகாந்த் எழுந்து நிற்க முடியாமல் வீல் சேரில் அமர்ந்து தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தது பலரையும் கண்கலங்க வைத்தது.
இந்நிலையில், விஜயகாந்த் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளார். விஜயகாந்த் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், விஜயகாந்த் பச்சை சட்டை, சாதாரண வேட்டி அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் பச்சை சேலையில் இருக்கிறார். அவருடைய மகன்கள் வேட்டி சட்டையில் உள்ளனர். விஜயகாந்த் பச்சை சட்டை சாதாரண வேட்டி அணிந்து கெத்தாக அமர்ந்து இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான தொல். திருமாவளவன், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் உள்ள அலுவலகத்தில் பொங்கல் கொண்டாடினார். தைப்பொங்கலையொட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள தாய் மண் அலுவலகத்தில் பாரம்பரிய உடை அணிந்தபடி பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை திருமாவளவன் டிவிட்டரில் பகிர்ந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”