ஆலந்தூரிலிருந்து பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த் அங்கிருந்து பல்லாவரத்தில் இறங்கி பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் புதிய பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. சுமார் 66 சதவீதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் சிறிதளவை குறைத்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் கட்டண குறைப்பு இன்று (29-ம் தேதி) அமல் ஆகியுள்ளது.
உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்கக்கோரி, சென்னை கொளத்தூரில், இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உட்பட பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்றைய தினம் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் குறைத்ததை, கண்துடைப்பு என்று சாடிய விஜயகாந்த், இன்று திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தார்.
அதன்படி பல்லாவரத்தில் இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க, ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்திற்கு பேருந்தில் பயணம் செய்தார் விஜயகாந்த்.
அரசு பேருந்தில் விஜயகாந்த் பயணம்... டிக்கெட் கட்டணம் குறித்து பயணிகளிடம் கருத்து கேட்பு@iVijayakant | #BusFareHike pic.twitter.com/n3QpS0tYUg
— News18 Tamil Nadu (@News18TamilNadu) 29 January 2018
கன்டக்ரிடம் 500 ரூபாயை நீட்டி தொண்டர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். தொடர்ந்து, பயணிகளிடம் டிக்கெட் விலை ஏற்றம் குறித்து கருத்துகளையும் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, பல்லாவரத்தில் இறங்கி பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தொண்டர்களுடன் இணைந்து விஜயகாந்த் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.