Villagers strike gold during temple renovation in Tamil Nadu : காஞ்சி உத்திரமேரூர் அருகே அமைந்துள்ளது குழம்பேஸ்வரர் சிவன் கோவில். 12ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இந்த கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஊர் மக்கள் தங்கள் சொந்த செலவில் தாமாக முன் வந்து கோவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 10ம் தேதி அன்று கணபதி ஹோமம் மற்றும் பாலாலயம் போன்ற பூஜைகளை மேற்கொண்டு கோவில் புணரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
கருவறைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் படிக்கற்களை அகற்றிய போது அங்கே பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் கிடைத்துள்ளது. அதனை வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
ஒரு கோவிலை கட்டி எழுப்பும் போது அங்கு தங்க நகைகளை வைப்பது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே அந்த நகைகளை திருப்பி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வருவாய் துறை அதிகாரி ரேவதி அந்த நகைகளை கருவூலத்தில் சேர்பித்துள்ளார். மேலும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவும், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த நகைகளை மக்களிடம் சமர்பிக்க வேண்டுமா என்பதை வருவாய்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தந்தி நாளிதழின் படி, அங்கு கண்டெடுக்கப்பட்ட நகைகள் மொத்தமாக 561 கிராம் எடை கொண்டுள்ளது. 30 நெற்றிச்சுட்டிகள், தங்க ஒட்டியாணம் 1, குண்டுமணி 29, பிறை 1, லட்சுமி உருவம் 1, ஒட்டியாண தகடு 3, துண்டு துண்டாக உடைந்த ஆரம் ஒன்றின் 5 பகுதிகள் இடம் பெற்றிருந்தது. உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்காக பெயர் பெற்றது. மேலும் டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிட பூமி பூஜை நடைபெற்ற போது இந்த ஊரின் பெருமை குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil