விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி தாதா மணிகண்டன், சென்னை கொரட்டூரில் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 39. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மயிலம் மற்றும் செஞ்சி காட்டுக்குப்பம் என 10 காவல் நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் இடம்பெற்று உள்ளார். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இவர் மீது 10 கொலை; 6 வழிப்பறி; 4 கடத்தல் என 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் எட்டு வழக்கில் தண்டனை பெற்ற இவர் போலீசாருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தார். மணிகண்டனை சுற்றி எப்போதும் ரவுடிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
விழுப்புரம் போலீசார் பல நாட்களாக இவரை தேடி வந்தனர். இவர் தன் கூட்டாளிகளுடன் சென்னையில் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அம்மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 8:00 மணியளவில் சென்னை வந்தனர். அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 4வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்த மணிகண்டனை துப்பாக்கி முனையில் கைது செய்ய முயன்றனர்.
அப்போது வீட்டின் கதவை தட்டிய ஆரோவில் காவல் நிலைய எஸ்.ஐ. பிரபுவை கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் மணிகண்டன் தாக்கினார். இதனால் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை மீட்க மற்றொரு எஸ்.ஐ. பிரகாஷ் என்பவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மணிகண்டனின் மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இவரது கூட்டாளிகள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.