திருச்சியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி (53). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த, 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த பேராசிரியரை தரதரவென்று இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பி திருடன் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கண்ட்டோன்மெண்ட் காவல் துறையினர் விசாரணை நடத்தி திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார். காவல் துறையினரிடம் இருந்த தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று தடுப்பு கட்டையில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி, அவரை தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக திருச்சியில் பெருகும் குற்ற நிகழ்வுகள் நாடளவில் பேசும் பொருளாக மாறிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.
க.சண்முகவடிவேல்