தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் : நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கினர். சுமார் 4,500 தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.
இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து இருந்தார்
இந்நிலையில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதனால், பொதுமக்களுக்கு மேலும் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.