Advertisment

அப்பீல் போவாரா, பொதுக் குழுவை கூட்டுவாரா? இ.பி.எஸ் அடுத்த மூவ் என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அவர் மேல் முறையீடு செய்வாரா, அவருடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும். அவருக்கு முன் இருக்கும் வழிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
aiadmk general council case, high court judgement, tamilnadu, what next, eps next move, அதிமுக, ஓபிஎஸ், பொதுக்கு ழுவு வழக்கு தீர்ப்பு, இபிஎஸ் அடுத்த மூவ் என்ன

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதில், இ.பி.எஸ் தரப்பு ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் இனி பொதுக்குழு எப்படி கூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பொதுக்குழுவை யாரும் தனியாக கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழு கூட்ட சட்ட ஆணையரையும் நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

மேலும், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை ஆண்டுக்கு ஒருமுறை தான் கூட்டவேண்டும். அதனால், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழு கூட்டப்படவேண்டும். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பிலும் செய்யப்பட்ட புதிய பதவி நியமனங்கள் செல்லாது. கட்சியிலிருந்து நீக்கி இருதரப்பிலிருந்தும் நீக்கப்பட்ட உத்தரவுகளும் செல்லாது உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் அதிமுகவின் தலைமையைக் கைப்பற்ற முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்வாரா, அவருடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஓ.பி.எஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினாலும், இது ஓ.பி.எஸ் தரப்புக்கு முழு வெற்றி அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அப்படி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்று விசாரிக்கும் அல்லது தள்ளுபடி செய்யும். இந்த வழக்கை மேல்முறையீட்டில் ஏற்று விசாரித்தால், ஓ.பி.எஸ் தரப்புக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். அதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பார்கள். வழக்கு விசாரணை நடைபெற்று இடைக்காலத் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இப்படி மேல்முறையீடு என சென்று கொண்டிருந்தால் வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்வு கிடைக்க அதிக காலம் பிடிக்கும் இதுதான் இ.பி.எஸ் தரப்பு முன் இருக்கும் ஒரு வாய்பாக இருக்கிறது.

அதே நேரத்தில், இ.பி.எஸ் முன் மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அதாவது, உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டும்போது, அதில் கொண்டுவரப்படும் தீர்மாணத்தால் ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டால், இ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடலாம். அப்போது நீதிமன்றம் ஒரு ஆணையரை நியமிக்கும். ஆணையரின் முன் பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் பெரும்பாலானவர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் என்ன தீர்மானத்தை முன்வைக்கிறார்களோ அது நிறைவேற்றப்படும். அப்படி, இ.பி.எஸ் பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றினால் பொதுச் செயலாளராகிவிடுவார். ஆனால், இந்த நடைமுறை நடந்து முடிப்பதற்கு, 3 மாதங்களாவது ஆகும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதனால், இந்த தீர்ப்பு ஓ.பி.எஸ்-க்கு சாதகமானது என்று சொல்லிவிட முடியாது என்று அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு, தற்போது மட்டும் ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக இருந்தாலும் இ.பி.எஸ் தரப்புக்கு சாதகமான வழிகள் நிறைய இருக்கிறது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில், அரசியலில் என்னவேண்டுமானலும் நடக்கலாம் என்பதால் அடுத்து இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இரு தரப்பு நகர்வுகளையும் அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Ops Eps Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment