”சினிமா, அரசியல் எதுவாக இருந்தாலும் காலம் வந்தால் தானாக நடக்கும்”, என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நான்காவது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார். முன்னதாக, அவர் பேசியதாவது, “இன்றைக்கு 4-வது நாள். இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.”, என 31-ஆம் தேதி தன்னுடைய அறிவிப்புக்கு இரண்டு நாட்களே உள்ளன என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார்.
”ரசிகர்களை இந்த சந்திப்புக்கு பின் மிஸ் செய்வேன்”, எனவும் அவர் கூறினார்.
மேலும், “கோயம்புத்தூர் எனக்கு மிக முக்கியமான இடம். ஏராளமான நண்பர்கள், குருநாதர் சுவாமி சச்சிதானந்தர், தயானந்த சரஸ்வதி ஆகியோர் பிறந்த இடமாகும்.”, என தெரிவித்தார்.
அதன்பின், அண்ணாமலை திரைப்படம் வெளியான தருணத்தில் கோயம்புத்தூர் மக்கள் தனக்கு பெரும் வரவேற்பு அளித்ததாகவும், அப்போது உடனிருந்த நடிகர் சிவாஜி கணேசன் முன்பு மக்களின் பாராட்டை பெறுவதில் தனக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், சிவாஜி கணேசன் “இது உன்னுடைய காலம். நல்ல படங்களை மக்களுக்கு தா”, எனக்கூறி ஊக்கப்படுத்தியதை நினைவுகூர்ந்தார்.
அதன்பின், சிறிதுகாலம் கழிந்து வேறொரு நடிகருக்கு இந்த ஆதரவு பெருகியதாக நடிகரின் பெயரை குறிப்பிடாமல் சொன்னார். அப்போது, “இது அவருடைய காலம்”, என தான் கருதிக்கொண்டதாக ரஜினி கூறினார்.
“சினிமா, அரசியல் எதுவாக இருந்தாலும் காலம்தான் முக்கியம். காலம் வந்தால் எல்லாம் தானாக நடக்கும்”, என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரசிகர்களின் சந்திப்புக்கு பிறகு, “திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா?”, என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு, “அதைப்பற்றி ஏதும் சொல்ல மாட்டேன்”, என அக்கேள்வியை தவிர்த்தார்.