தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
இந்த சூழலில்தான், திமுக அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவராக ஆண் இருந்தால் இந்த உதவித் தொகை கிடைக்காது என்று வதந்தி பரவியது. இதை உண்மை என்று நம்பிய பல குடும்ப அட்டை தாரர்கள் ரேஷன் அட்டையில் ஆண் குடும்பத் தலைவர் என்று இருந்த இடத்தில் ஆண்லைன் மூலம் குடும்பத் தலைவி என்று மாற்றினார்கள். ஏராளனமோர் தங்கள் ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவியாக மனைவியை மாற்றி பதிவு செய்யத் தொடங்கினார்கள். இது போன்ற விண்ணப்பங்கள் ஏராளமாக உணவுப் பொருள் விநியோக துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியானது. அது மட்டுமில்லாமல், இதுவரை ரேஷன் அட்டை வாங்காதவர்கள் பலரும் ரேஷன் அட்டை வாங்குவதற்கு விண்ணப்பித்தனர். ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் இப்படி குழப்பமான நிலை நிலவியதையடுத்து குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்றதகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உபயோகத்தில் இருக்கும் ரேஷன் அட்டை ஸ்மார்ட் காடுகளில் ரேஷன் அட்டைதாரரின் புகைப்படத்துக்கு கீழே PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என 5 வகையான குறியீடுகள் உள்ளன.
ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அடிப்படையில் இந்த குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். NPHH என குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். NPHH-NC என இருந்தால் ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் தரப்படமாட்டாது. ரேஷன் அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இந்த 5 வகையான குறியீடுகள் உள்ள ரேஷன் அட்டைகளில் யாருக்கு எல்லாம் தமிழ்நாடு அரசின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் மூலம் ரூ.1,000 ரூபாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில் ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளுக்கு வழங்கப்படமாட்டாது. அதனால், யாரும் தேவையில்லாமல், ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவியாக பெயர் மாற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.