ஜனார்த்தன் கௌஷிக்
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், மாரிதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், "மாரிதாஸ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை சமூக வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழிநடத்துவதிலும் அவர் மிகவும் திறமையானவர் எனத் தெரிகிறது.
அவர் இயக்கிவரும் ஃபேஸ்புக் பக்கம், யூ-ட்யூப் சேனல் மற்றும் வலைத்தளம் ஆகியவற்றை அவதூறு பரப்பும் குப்பைத் தொட்டியாகவும், போலிச் செய்திகள் மற்றும் பிரிவினைவாத கருத்துகளைப் பரப்புவதற்கான நிலையமாகவும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று, மாரிதாஸ் தனது யூ-ட்யூப் சேனலில் “தி.மு.க தடை செய்யப்படவேண்டுமா?” என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான கருத்துகள். சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கம் கொண்டவை.
ஒரு பெரிய திரை முன்பு நின்றபடி, உலகளாவிய புவி அரசியலைப் பேசும் அறிஞர் போன்ற தோற்றத்தை உருவாக்கும் மாரிதாஸ், பொது அமைதியை குலைப்பதையும் பகைமையை ஊக்குவிப்பதையும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே வெறுப்பைத் தூண்டுவதையுமே விரும்புகிறார் என்பது வீடியோவைப் பார்த்தால் தெளிவாகிறது. மாரிதாஸ் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புகிறார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
திமுக புகாருக்குப் பிறகு, #ISupportMaridhas மற்றும் #MentalMaridhas ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகின.
யார் இந்த மாரிதாஸ்?
மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்படுபவர். கடந்த 2018ம் ஆண்டு, "ஏன் நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்" என்று புத்தகம் வெளியிட்டிருந்தார். இவரது முகநூல் பக்கத்தில் 100K ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதேபோல், யூடியூப் சேனலில், 1.64 லட்சம் subscribers உள்ளார்கள்.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எதிராகவும் சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பாஜக ஆதரவாளர்கள் இவரைக் கொண்டாடுவதும், பாஜகவிற்கு எதிரான கருத்துடையவர்கள் இவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாரிதாஸ் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில், “சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான திமுகவின் நிலைப்பாடு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் திமுகவிற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ மட்டும் 158K பார்வைகள் பெற்றுள்ளது.
மாரிதாஸ் தனது முந்தைய வீடியோவில், "திமுக தடை செய்யப்பட வேண்டுமா?" என்ற தலைப்பில் பேசியிருந்தார். அதிலும், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி, பரவலாக இந்தியா முழுவதும் பலரும் திமுகவை தடை செய்ய வேண்டும் என கோருகிறார்கள் என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
திமுகவை தவிர்த்து, தமிழ் தேசியம், நீட், பிக்பாஸ் என பல விவகாரங்கள் குறித்தும் இவர் பேசிவருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.