சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பதற்கு ஏரி நிரம்பியது மட்டும் காரணம் அல்ல. இன்று ஒரே நாளில் செம்பரம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென திறந்துவிடப்பட்ட உபரி நீர் வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
நிவர் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவாக நிரம்பி வந்தது. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “மழையின் அளவைப் பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும். செம்பரம்பாக்கம் ஏரியின் 22 அடி கொள்ளளவை எட்டியதும் திறந்துவிடப்படும்”என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) காலை செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் 22 அடியை எட்டியதும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், அடையாறு கரையோர பகுதிகள், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதற்கு காரணம் ஏரி நிரம்பியது மட்டுமல்ல, செம்பரம்பாக்கம் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 செ.மீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு சுமார் 7,000 கன அடி நீர் வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழையின் அளவைப் பொறுத்து 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதற்கு இது முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"