Advertisment

பிரதமரின் குட்புக்கில் திருப்புகழ் ஐஏஎஸ்; ஸ்டாலின் சென்னை வெள்ள தணிப்பு குழு தலைவராக நியமித்தது ஏன்?

பிரதமர் மோடியின் குட்புக்கில் உள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழை முதல்வர் ஸ்டாலின் எப்படி சென்னை வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மை அறிவுரைக் குழுவின் தலைவராக நியமித்தார் என்ற கேள்விகள் எழுந்ததையடுத்து, அவருடைய பணியும் சாதனைகளும் வெளியாகி வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
why CM MK Stalin appointed Thiruppugazh IAS for chennai flood control team, chennai food control team, சென்னை வெள்ளம், திருப்புகழ் ஐஏஸ், சென்னை வெள்ள தணிப்பு மேலாண்மை குழு, முதல்வர் முக ஸ்டாலின், இறையன்பு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் யார், cm mk stalin, chennai rains, chennai flood, chennai, north eastern monsoon, tamil nadu, thiruppugazh ias, thiruppugazh ias , Iraiyanbu ias

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தத்தளித்தது. அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், வருங்காலத்தில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு கான தமிழ்நாடு அரசு அமைந்துள்ள குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் திருப்புகழ். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அமைத்துள்ள குழுவுக்கு பிரதமர் மோடியின் குட்புக்கில் உள்ள ஒரு அதிகாரியை முதல்வர் ஸ்டாலின் எப்படி தலைவராக நியமித்தார் என்ற கேள்விகள் எழுந்ததையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் பற்றியும் அவருடைய பணியின் சாதனைகளும் வெளியாகி வருகின்றன.

1991 ஆண்டு குஜராத் மாநில பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வாகி அந்த மாநிலத்தில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்புகழ் ஐ.ஏ.எஸ், தற்போதை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் 2005ம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை அவருடைய செயலாளராக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், திருப்புகழ் ஐ.ஏ.எஸ் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரிடர் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர். பிரதமர் மோடியின் கூடுதல் முதன்மை செயலாளர் முனைவர் பி.கே.மிஸ்ராவுடன் இணைந்து பல முக்கியமான அரசு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

குஜராத்தில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தின்போது, மீட்பு பணியில் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டார். அதே போல, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியாவில் இருந்து சிறப்பு ஆலோசகராக நேபாளத்துக்கு திருப்புகழ் அனுப்பப்பட்டார். அந்த அளவுக்கு பேரிடர் மீட்பு பணிகளில் அரசு இயந்திரத்தை திறமையுடன் செயல்படுத்துபவர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணைச்செயலாளராகவும் திருப்புகழ் பணியாற்றியுள்ளார். இவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்தபோது, தமிழகத்தில் புயல் பாதிப்பு மற்றும் வறட்சிப் பாதிப்புகளை பார்வையிடும் குழுவின் தலைவராக தமிழகத்துக்கு வந்தார். சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அதோடு, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

திருப்புகழ் ஐ.ஏ.எஸ் மத்திய அரசிலும், மாநில அரசிலும் பேரிடர் மேலாண்மையில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். அதனால்தான், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று அரசு வட்டாரங்கள் கூறுகிறார்கள். அதோடு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருபுகழ், தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்புவின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்டஅலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடிகட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப்மோசஸ், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் துறையின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக ரிமேட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீர்வளத் துறைதலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment